Sunday, May 6, 2018



  • 6. 
  • கம்பன் காட்டும் சொர்க்கம்
  • இராமாயணம் படைத்த கம்பருக்கும்
  • சொர்க்கத்தின் கனவு இருந்தது!
  • மண்ணுலகில் ஒரு சொர்க்கத்தை
  • படைத்துக்காட்டுகிறார்!
  • கம்ப இராமாயண
  • பால காண்ட
  • நாட்டு படலத்தில்
  • ஒரு 60 பாடல்களில்
  • தசரதன் ஆண்ட
  • இராமர் பிறந்த
  • கோசல நாட்டை
  • மண்ணுலக சொர்க்கமென
  • படைத்துக்காட்டுகிறார்!
  • அவர் படைத்த பாடல்கள்
  • அத்தனையும் சொக்கத்தங்கம்!
  • அலை அலையாய் எழுந்து
  • ஆனந்தமாய் இசைக்கும் சந்தம்!
  • அவர் படைத்த சொர்க்கத்தின்
  • அழகிற்காக புகழ்வதா?
  • அவர் வடித்த அற்புத
  • வரிகளுக்காக புகழ்வதா?
  • எதை புகழ்வது என்று
  • எனக்கு புரியவில்லை!
  • மது உண்ட வண்டுபோல்
  • மயங்கிக் கிடக்கிறேன்!
  • மானுட வாழ்வைமட்டும்
  • சொல்லவில்லை!
  • ஆறுகள், மலைகள்,
  • காடுகள், வயல்கள்
  • செடிகள் கொடிகள்
  • மரங்கள் மயில்கள்
  • மான்கள் மீன்கள்
  • வேலைகள் ஆலைகள்
  • வளங்கள் நலங்கள்
  • குணங்கள் மனங்கள் என
  • எல்லாவையும் கண்முன்னே
  • காட்சியாக விரிக்கின்றார்!
  • கற்பனை தேரிலே ஏற்றி
  • கனவிலே மிதக்க வைக்கின்றார்!
  • அவர் படைத்ததில் பாதியைதான்
  • நான் இங்கு
  • உங்கள் ரசனைக்கு பகிர்கின்றேன்!
  • இனி வருவனவற்றில்
  • என் வரிகள் எதுவுமில்லை!
  • கம்பன் படைத்த கவிதைக்கு
  • யாரோ ஒரு கொம்பன்
  • கொடுத்த உரைநடை!
  • இரண்டையும் உங்கள்முன்
  • வைக்கின்றேன்!
  • நீங்களே அள்ளி பருகுங்கள்!
  • ஆனந்தம் கொள்ளுங்கள்!
  • மண்ணுலக சொர்க்கம்
  • மீண்டும் வருமா என்ற
  • ஏக்கம் வரும் என்றுமட்டும்
  • நான் இங்கு ஓங்கி சொல்லுவேன்!
  • கம்ப இராமாயணத்தின்மீது
  • உங்களுக்கு உடனே
  • ஒரு காதல் வரும் என்றுமட்டும்
  • துணிந்து சொல்லுவேன்!
  • இதோ உங்கள்முன்
  • வைக்கின்றேன்!
  • நீங்களே அள்ளி பருகுங்கள்!
  • ஆனந்தம் கொள்ளுங்கள்!
  • இன்னும் நான் உங்களுக்கு
  • இங்கு எதற்கு தடை?
  • இப்போதே சொல்லுகின்றேன்
  • இன்பந்தரும் விடை!
  • -------------------------------------------------------------------
  • வரம்பு எலாம் முத்தம்; தத்தும் மடை எலாம் பணிலம்; மா நீர்க்
  • குரம்பு எலாம் செம்பொன்; மேதிக் குழி எலாம் கழுநீர்க் கொள்ளை;
  • பரம்பு எலாம் பவளம்; சாலிப் பரப்பு எலாம் அன்னம்; பாங்கர்க்
  • கரும்பு எலாம் செந் தேன்; சந்தக் கா எலாம் களி வண்டு ஈட்டம்.
  • (கம்ப-பால-நாட்டு-2)
  • என்ன அருமையான சந்தம்! கம்பனின் வரிகள் எல்லாம் அமுதம்!
  • வரப்பு எல்லாம் முத்து.
  • மடை எல்லாம் சங்கு.
  • ஈரநிலம் எல்லாம் பொன்.
  • எருமைக் குழி எல்லாம் கழுநீர்ப் பூக்கள்.
  • நீர்க்கரை எல்லாம் பவளம்.
  • நெல்வயல் எல்லாம் அன்னம்.
  • கரும்பு எல்லாம் தேன்கூடு.
  • சந்தனக் காடு எல்லாம் மகிழ் வண்டுகள்.
  • ஆறு பாய் அரவம், மள்ளர் ஆலை பாய் அமலை, ஆலைச்
  • சாறு பாய் ஓதை, வேலைச் சங்கின் வாய்ப் பொங்கும் ஓசை,
  • ஏறு பாய் தமரம், நீரில் எருமை பாய் துழனி, இன்ன
  • மாறு மாறு ஆகி, தம்மில் மயங்கும்-மா மருத வேலி.
  • (கம்-பால-நாட்டு-3
  • கம்பன் கவிதை காதில் பாய்ந்தால்
  • இன்பம் மனதில் எப்படி பாய்கிறது!
  • ஆறு பாயும் ஓசை.
  • உழவர் கரும்பாலையில் பாயும் ஆரவாரம்.
  • கரும்புச்சாறு பாயும் ஓசை.
  • கடலில் சங்கு வாய் பொங்கும் ஓசை.
  • காளைகள் முட்டி பாயும் முனைப்பு.
  • நீரில் எருமை பாயும் மகிழ்ச்சி.
  • இப்படி மாறி மாறி பாய்ந்து,
  • மயங்கும் மருதநிலம்.
  • தண்டலை மயில்கள் ஆட, தாமரை விளக்கம் தாங்க,
  • கொண்டல்கள் முழவின் ஏங்க, குவளை கண் விழித்து நோக்க,
  • தெண் திரை எழினி காட்ட, தேம் பிழி மகர யாழின்
  • வண்டுகள் இனிது பாட, -மருதம் வீற்றிருக்கும் மாதோ.
  • (கம்ப-பால-நாட்டு-4)
  • என்ன அழகிய காட்சி?
  • இன்பத்திற்கு இதுவன்றோ சாட்சி?
  • மருதம் என்னும் சோலையில்
  • மயில்கள் ஆட,
  • தாமரை அதற்கு
  • விளக்கு தாங்க,
  • மேகங்கள் இடி முழங்க,
  • குவளைமலர்கள் கண்விழித்து பார்க்க,
  • நீரலைகள் ஆட்டத்துக்குத் திரையாக,
  • தேன் உண்ட வண்டுகள் மகரயாழ் இசைக்க,
  • மருதம் மகிழ்ச்சி கொண்டதன்றோ!
  • (நீரிடை உறங்கும் சங்கம்; நிழலிடை உறங்கும் மேதி;
  • தாரிடை உறங்கும் வண்டு; தாமரை உறங்கும் செய்யாள்;
  • தூரிடை உறங்கும் ஆமை; துறையிடை உறங்கும் இப்பி;
  • போரிடை உறங்கும் அன்னம்; பொழிலிடை உறங்கும் தோகை.)
  • (கம்ப-பால-நாட்டு-6)
  • இன்ப துய்ப்பில் பொங்கும் உறக்கம்!
  • இக்கவிதை பயின்றால் வாராதோ மயக்கம்!
  • நீரில் உறங்கும் சங்கு,
  • நிழலில் உறங்கும் எருமை,
  • தாமரையில் உறங்கும் திருமகள்,
  • புதரில் உறங்கும் ஆமை,
  • நீர்த்துறைகளில் உறங்கும் சிப்பி,
  • வைக்கோல் போரில் உறங்கும் அன்னம்,
  • சோலையில் உறங்கும் மயில்கள்!
  • (ஆலைவாய்க் கரும்பின் தேனும், அரி தலைப் பாளைத் தேனும்,
  • சோலை வீழ் கனியின் தேனும், தொடை இழி இறாலின் தேனும்,
  • மாலைவாய் உகுத்த தேனும்,-வரம்பு இகந்து ஓடி வங்க
  • வேலைவாய் மடுப்ப உண்டு மீன் எலாம் களிக்கும் மாதோ.)
  • (கம்ப-பால-நாட்டு-9)
  • கம்பன் கவித்தேன் மலைத்தேன் சுவைத்தேன்
  • களித்தேன் காண வந்த வேலையை மறந்தேன்!
  • ஆலையில் பிழியும் கரும்புத்தேன்,
  • பாளையில் இறங்கும் கள்ளெனும் தேன்,
  • சோலையில் விழும் பழத்தேன்,
  • கட்டு உடைந்து கொட்டும்
  • தேன் கூட்டுத் தேன்,
  • மக்கள் அணிந்திருக்கும்
  • மாலைகளில் வழியும் தேன்;
  • இவை எல்லாம் பெருக்கெடுத்து
  • வங்கக் கடலில் கலக்கும் தேன்!
  • மீன்கள் எல்லாம் உண்டு களிக்கும் தேன்!
  • வெண் தளக் கலவைச் சேறும், குங்கும விரை மென் சாந்தும்,
  • குண்டலக் கோல மைந்தர் குடைந்த, நீர்க் கொள்ளை சாற்றின்,
  • தண்டலைப் பரப்பும் சாலி வேலியும் தழீஇய வைப்பும்,
  • வண்டல் இட்டு ஓட மண்ணும் மதுகரம் மொய்க்கும் மாதோ.
  • (கம்ப-பால-நாட்டு-12
  • பூவில் தேனீ மொய்க்கும்!
  • கம்பன் பாவில் கண்ணும் மனமும்
  • காலமெல்லாம் மொய்க்கும்!
  • குண்டலம் பூண்ட கோலத்துடன்
  • மைந்தர் நீராடும்போது
  • அவர்கள் பூசிய
  • வெண்ணிறக் கலவைக் குழம்பும்,
  • மணக்கும் சந்தனமும்,
  • கலந்த நீர் பாய்ந்து
  • சோலையும் மண்ணும் மணப்பதால்
  • வண்டுகள் மொய்க்கும் போது,
  • மது உண்ட வண்டாய் ஆடவர் மொய்ப்பரன்றோ?
  • பொருந்திய மகளிரோடு வதுவையில் பொருந்துவாரும்,
  • பருந்தொடு நிழல் சென்றன்ன இயல் இசைப் பயன் துய்ப்பாரும்,
  • மருந்தினும் இனிய கேள்வி செவி உற மாந்துவாரும்,
  • விருந்தினர் முகம் கண்டன்ன விழா அணி விரும்புவாரும்;
  • (கம்ப-பால-நாட்டு-15)
  • கம்பன் கவிதைக்கு இல்லை சரிவு!
  • இன்பக்களிப்புக்கு இல்லை முடிவு!
  • விரும்பும் மகளிரோடு விரும்பித் தழுவியும்,
  • பருந்து பறக்க நிழல் பறப்பது போல
  • இயல் இசை இரண்டையும் துய்த்தும்,
  • மருந்து போல் உதவும் சொற்களைக் கேட்டும்,
  • விருந்தினர் முகத்தைக் கண்டது போல்
  • விழாக் கொண்டாடியும்
  • மக்கள் பொழுது போக்கினரன்றோ?
  • கறுப்புறு மனமும், கண்ணில் சிவப்புறு சூட்டும் காட்டி,
  • உறுப்புறு படையின் தாக்கி, உறு பகை இன்றிச் சீறி,
  • வெறுப்பு இல,களிப்பின் வெம் போர் மதுகைய, வீர ஆக்கை
  • மறுப்பட, ஆவி பேணா வாரணம் பொருத்துவாரும்;
  • (கம்ப-பால-நாட்டு-16)
  • போர் இல்லையென்றால் வீரனுக்கு என்ன வேலை?
  • காட்டுகிறது அதனை கம்பன் கவிச்சோலை!
  • நெஞ்சில் உறுதியும், கண்ணில் சிவப்பும் காட்டி,
  • பகைமை இல்லா படைக்கலம் போல
  • ஒருவரை ஒருவர் தாக்கிப்
  • பயிற்சி செய்துகொள்ளும்
  • வீரர்களின் வாழ்க்கை
  • கோழிப் போர் போல் காணுமன்றோ?
  • முள் அரை முளரி வெள்ளை முளை இற, முத்தும் பொன்னும்
  • தள்ளுற, மணிகள் சிந்த, சலஞ்சலம் புலம்ப, சாலில்
  • துள்ளி மீன் துடிப்ப, ஆமை தலை புடை கரிப்ப, தூம்பின்
  • உள் வரால் ஒளிப்ப, -மள்ளர் உழு பகடு உரப்புவாரும்;
  • (கம்ப-பால-நாட்டு-18)
  • வயலின் வளம் காட்டும் கண்காட்சி!
  • கம்பன் திறன் காட்டும் சொல்லாட்சி!
  • உழவர்கள் உழும் எருதுகளை
  • அதட்டிக்கொண்டு ஓட்டினர்.
  • அவர்கள் உழும்போது
  • முள்ளுத் தாமரையின்
  • வெள்ளை நிற முளைகள்
  • அறுந்து போயின.
  • முத்தும் பொன்னும் மணிகளும் சிந்தின.
  • வயலில் கிடக்கும் சங்குகள் ஒலித்தன.
  • மீன்கள் துள்ளித் துடித்தன.
  • ஆமைகள் முதுகைச் சொரிந்துகொண்டன.
  • வரால் மீன்கள் ஓடி ஒளிந்துகொண்டன.
  • றிதரும் அரியின் சும்மை எடுத்து வான் இட்ட போர்கள்
  • குறிகொளும் போத்தின் கொல்வார்; கொன்ற நெல் குவைகள் செய்வார்;
  • வறியவர்க்கு உதவி, மிக்க, விருந்து உண மனையின் உய்ப்பார்,
  • நெறிகளும் புதைய, பண்டி நிறைத்து, மண் நெளிய ஊர்வார்.
  • (கம்ப-பால-நாட்டு-20)
  • கதிர் படு வயலின் உள்ள, கடி கமழ் புனலின் உள்ள,
  • முதிர் பயன் மரத்தின் உள்ள, முதிரைகள் புறவின் உள்ள,
  • பதிபடு கொடியின் உள்ள, படி வளர் குழியின் உள்ள,
  • மதுவளம் மலரில் கொள்ளும் வண்டு என மள்ளர் கொள்வார்.
  • (கம்ப-பால-நாட்டு-21)
  • சுழன்றும் ஏர் பின்னது உலகு என்பதை
  • எடுத்துக்காட்டும் கம்பன் கவிதை!
  • நெல்லை அறுத்துக் கொண்டுவந்து
  • களத்தில் போர் அடிப்பர்.
  • நெல்லை வறியவர்களுக்கு வழங்குவர்.
  • விருந்தினர் உண்ண வேண்டும் என்று
  • வண்டிகளில் ஏற்றி மண்ணே நெளியுமாறு
  • வீட்டுக்குக் கொண்டுவருவர்.
  • விளைவயல், பொழில், பழுத்த மரங்கள்,
  • முல்லை நிலத்துத் துவரை,
  • பதியக் கொடியின் காய்கள்
  • ஆகியவற்றை மலரிலுள்ள தேனைக்
  • கொண்டு செல்லும் வண்டுகள் போல
  • உழவர்கள் கொண்டுவருவர்.
  • (தோயும் வெண் தயிர் மத்து ஒலி துள்ளவும்,
  • ஆய வெள் வளை வாய்விட்டு அரற்றவும்,
  • தேயும் நுண் இடை சென்று வணங்கவும்,
  • ஆயர் மங்கையர் அங்கை வருந்துவார்.)
  • (கம்ப-பால-நாட்டு-28)
  • (வள்ளி கொள்பவர் கொள்வன மா மணி;
  • துள்ளி கொள்வன தூங்கிய மாங்கனி;
  • புள்ளி கொள்வன பொன் விரி புன்னைகள்;
  • பள்ளி கொள்வன பங்கயத்து அன்னமே.)
  • (கம்ப-பால-நாட்டு-33)
  • நாட்டு வளத்தை காட்டும் கவிதைகள்
  • ஏட்டிலும் பாட்டிலும் இறவாத விதைகள்!
  • தயிர் கடையும் மத்தொலி கேட்கும்.
  • கடையும் கையிலுள்ள வளையல்
  • வாய் விட்டு அலறும்.
  • நுண்ணிய இடை வளையும்.
  • இதனால் ஆய்ச்சியர் வருந்துவர்.
  • வள்ளிக் கிழங்கு தோண்டுபவர்
  • மணிகளைப் பெறுவர்.
  • மாம்பழங்களைத் துள்ளிக் குதித்துப் பறிப்பர்.
  • புன்னை மரங்கள் புள்ளி புள்ளியாகப் பூக்கும்.
  • தாமரையில் அன்னம் உறங்கும்.
  • பெருந் தடங் கண் பிறைநுதலார்க்கு எலாம்,
  • பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்,
  • வருந்தி வந்தவர்க்கு ஈதலும், வைகலும்,
  • விருந்தும் அன்றி விளைவன யாவையே?
  • (கம்ப-பால-நாட்டு-36)
  • செல்வமும் கல்வியும் மகளிர் எய்தினால்
  • நிலவும் நிலையை அன்றே நிறுவிய
  • கம்பனின் கவித்திறன் என்னே என்ப!
  • மகளிர்க்கு அவர்களின் கண்களைப் போல
  • செல்வமும் கல்வியும் பூத்தன.
  • அதனால் வருந்த வந்தவர்களுக்கெல்லாம்
  • வழங்குவதும், நாள்தோறும் விருந்தோம்புதலும் அன்றி
  • வேறு விருப்பம் இல்லாதவர்களாக
  • அவர்கள் இருந்தனர்.
  • கலம் சுரக்கும் நிதியம்; கணக்கு இலா
  • நிலம் சுரக்கும் நிறை வளம்; நல் மணி
  • பிலம் சுரக்கும்; பெறுதற்கு அரிய தம்
  • குலம் சுரக்கும், ஒழுக்கம்-குடிக்கு எலாம்.
  • (கம்ப-பால-நாட்டு-38)
  • எத்தனை சுரக்கும் இன்ப சுரங்கம்!
  • பித்தினை ஆக்கும் கவி அரங்கம்
  • கப்பல் நிதியத்தையும்,
  • நிலம் வளத்தையும்,
  • நிலத்தடி மணிகளையும்,
  • மக்கள் குலம் குடிமக்களுக்கு
  • ஓழுக்கத்தையும் சுரந்தன.
  • கூற்றம் இல்லை ஓர் குற்றம் இலாமையால்;
  • சீற்றம் இல்லை தம் சிந்தையின் செம்மையால்;
  • ஆற்ற நல் அறம் அல்லது இலாமையால்,
  • ஏற்றம் அல்லது இழிதகவு இல்லையே.
  • (கம்ப-பால-நாட்டு-39)
  • இப்படி ஒரு உலகம் உண்டானால்,
  • சொர்க்கத்தின் வாசல் திறக்குமன்றோ?
  • நாட்டில் குற்றமே இல்லாததால்
  • தண்டனை என்பதே இல்லை.
  • எண்ணங்கள் செவ்விதாக இருப்பதால்
  • யாரிடமும் சினமே இல்லே.
  • ஆற்றல் மிக்க நல்லறம் அல்லது
  • அல்லறம் இல்லாமையால்
  • உயர்வோ இழிவோ யாருக்கும் இல்லை.
  • விதியினை நகுவன அயில் விழி; பிடியின்
  • கதியினை நகுவன அவர் நடை; கமலப்
  • பொதியினை நகுவன புணர் முலை,கலை வாழ்
  • மதியினை நகுவன வனிதையர் வதனம்.
  • (கம்ப-பால-நாட்டு-44)
  • வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும்!
  • காயும் உடனே கனியும் கவிகேட்டுவிட்டால்!
  • விதியைப் பார்த்து
  • உழத்தியர் விழிகள் சிரித்தன.
  • கதியைப் பார்த்து
  • அவர்களின் நடை சிரித்தது.
  • தாமரை மொட்டைப் பார்ந்து
  • அவர்களின் தனங்கள் சிரித்தன.
  • கலை நிறைந்த நிலவைப் பார்த்து
  • அவர்களின் முகம் சிரித்தது.
  • பகலினொடு இகலுவ படர் மணி; மடவார்
  • நகிலினொடு இகலுவ நளி வளர் இளநீர்;
  • துகிலினொடு இகலுவ சுதை புரை நுரை; கார்
  • முகிலினொடு இகலுவ கடி மண முரசம்.
  • (கம்ப-பால-நாட்டு-45)
  • போட்டி என்றால் கூட்டும் பரவசந்தான்!
  • பாட்டு என்றால் அது கம்பன் கவிரசந்தான்!
  • அவர்கள் அணிந்திருந்த மணிகள்
  • பகலோடு போட்டி போட்டுக்கொண்டன.
  • அவர்களின் தனங்களோடு
  • இளநீர் போட்டியிட்டது.
  • நீரில் நின்ற வெள்ளை நுரை
  • அவர்களின் ஆடையோடு போட்டியிட்டது.
  • அவர்களின் மண முரசம்
  • முழங்குவது போல இடி முழங்கியது.
  • காரொடு நிகர்வன கடி பொழில்; கழனிப்
  • போரொடு நிகர்வன புணர்மலை; அணை சூழ்
  • நீரொடு நிகர்வன நிறை கடல்; நிதி சால்
  • ஊரொடு நிகர்வன இமையவர் உலகம்.
  • (கம்ப-பால-நாட்டு-46)
  • ஒப்பில்லை உயர்வில்லை தப்பில்லை தளர்வில்லை!
  • கம்பன் பாட்டிற்கு முன்நிற்க எதுவும் வரவில்லை!
  • கார் மேகமும் பொழிலும்
  • ஒப்பாய் நின்றன.
  • உழவர் கழனியில் இட்ட போரும்
  • இமய மலையும்
  • ஒப்பாகத் தோன்றின.
  • வயலிலுள்ள நீரும் கடலும்
  • ஒப்பாகத் திகழ்ந்தன.
  • இங்குள்ளவரின் செல்வ வளம்
  • மிக்க ஊரும் வானுலகமும்
  • ஒப்பாகத் தோன்றின.
  • நெல் மலை அல்லன நிரை வரு தரளம்;
  • சொல் மலை அல்லன தொடு கடல் அமிர்தம்;
  • நல் மலை அல்லன நதி தரு நிதியம்;
  • பொன் மலை அல்லன மணி படு புளினம்.
  • (கம்ப-பால-நாட்டு-47)
  • நிலம் என்றால் இது நிலம்!
  • வளம் என்றால் இது வளம்!
  • இது நெல் மலை அல்ல!
  • அதுபோலுள்ள இதுவென்ன?
  • இது கடலோரத்தில் குவிந்திருக்கும்
  • முத்துக் குவியல் தான்!
  • இது வாயில் வரும் சொல் மலை அல்ல!
  • அதுபோலுள்ள இதுவென்ன?
  • பாற்கடலில் தோன்றிய அமிழ்தந்தான்!
  • இது உண்மையான மலை அல்ல!
  • அதுபோலுள்ள இதுவென்ன?
  • அந்த நாட்டு ஆறுகள் கொண்டுவந்த
  • நிதிக் குவியல்தான்!
  • இது பொன் மலை அல்ல!
  • அதுபோலுள்ள இதுவென்ன?
  • இது மணிகள் குவிந்து கிடக்கும்
  • மணல் குவியல் தான்!
  • பந்தினை இளையவர் பயில் இடம் மயில் ஊர்
  • கந்தனை அனையவர் கலை தெரி கழகம்;
  • சந்தன வனம் அல, சண்பக வனம் ஆம்;
  • நந்தன வனம் அல, நறை விரி புறவம்;
  • (கம்ப-பால-நாட்டு-48)
  • இளைஞர் விளையாடும் களம்
  • இன்பம் தரும் வளம்!
  • இளைஞர் பந்தாடும் இடம்
  • மயிலில் ஊர்ந்து செல்லும்
  • முருகனைப் போன்றவர்
  • கலைகளைப் பயிலும் இடமாகும்.
  • அங்கு உள்ளவை
  • சந்தன வனம் அன்று;
  • சண்பகப் பூ பூத்துக்கிடக்கும் வனம்.
  • அங்கு இருப்பவை நந்தவனம் அல்ல,
  • மணம் கமழும் முல்லை நிலம்.
  • கோதைகள் சொரிவன குளிர் இள நறவம்;
  • பாதைகள் சொரிவன பரு மணி கனகம்;
  • ஊதைகள் சொரிவன உறை உறும் அமுதம்;
  • காதைகள் சொரிவன செவி நுகர் கனிகள்;
  • (கம்ப-பால-நாட்டு-51)
  • இன்பம் சொரிவது கம்பன் பாட்டு!
  • இல்லை மாற்று என்றே சாற்று!
  • மாலைகள் சொரிவது தேன்.
  • பாதை வழிகள் சொரிவது மணிக்கற்கள்.
  • ஊதைகள் (வாடைக் காற்று) சொரிவது
  • உறையும் நீர்த்துளி.
  • சொல்லும் காதைப் பாட்டு சொரிவது
  • காதுக்கு உகந்த கனிகள்.
  • வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்;
  • திண்மை இல்லை ஓர் செறுநர் இன்மையால்;
  • உண்மை இல்லை பொய் உரை இலாமையால்;
  • வெண்மை இல்லை பல் கேள்வி மேவலால்.
  • (கம்ப-பால-நாட்டு-53)
  • சொர்க்கம் இதுதான் என்று சொல்ல
  • இதுவன்றோ காரணம்:
  • இங்கிதுவெல்லாம் இனியாவது
  • இனிதே மாறணும்!
  • கோசல நாட்டில் வள்ளண்மை இல்லை;
  • காரணம் வறுமையுற்று வாங்குவோர் இல்லை!
  • வலிமை இல்லை;காரணம் போரிடுவோர் இல்லை!
  • உண்மை இல்லை;காரணம் பொய்யே இல்லை!
  • அறியாமை என்னும் வெண்மை இல்லை;
  • காரணம் பல நல்லனவற்றை மக்கள் சொல்வதால்!
  • கூறு பாடலும், குழலின் பாடலும்,
  • வேறு வேறு நின்று இசைக்கும் வீதிவாய்,
  • 'ஆறும் ஆறும் வந்து எதிர்ந்த ஆம்' என,
  • சாறும் வேள்வியும் தலைமயங்குமே.
  • (கம்ப-பால-நாட்டு-56)
  • எத்தனை பாடல், எத்தனை பாடல்?
  • அத்தனையும் கம்பன் புகழ் பாடும்!
  • வாயில் வரும் பாட்டும்,
  • குழலில் வரும் பாட்டும்
  • வெவ்வேறு தெருக்களில் இசைக்கும்.
  • இவை ஆறும் ஆறும் எதிர்த்துக்கொண்டு
  • ஒன்று கலப்பது போல
  • ஊரில் திருவிழாவும்,
  • வேள்வியும் ஆங்காங்கே நிகழும்.
  • மூக்கில் தாக்குறும் மூரி நந்தும்; நேர்
  • தாக்கின் தாக்குறும் பறையும், தண்ணுமை
  • வீக்கின் தாக்குறும் விளியும், -மள்ளர்தம்
  • வாக்கின் தாக்குறும் ஒலியில் மாயுமே.
  • (கம்ப-பால-நாட்டு-57)
  • சங்கு முழங்க பறை அதிர தினம்
  • பொங்கும் பாடல் தங்கும் மனம்!
  • மூக்கில் வாய் வைத்து ஊதும் சங்கு,
  • அடித்துத் தாக்கும் பறை,
  • உரசித் தாக்கும் தண்ணுமை
  • ஆகியவற்றின் ஒலிகள்
  • உழவர் ஒலியில் அடங்கிப் போகும்.
  • (பொற்பின் நின்றன பொலிவு; பொய் இலா
  • நிற்பின் நின்றன நீதி; மாதரார்
  • அற்பின் நின்றன அறங்கள்; அன்னவர்
  • கற்பின் நின்றன கால மாரியே.)
  • (கம்ப-பால-நாட்டு-59)
  • அன்பும், பண்பும் அறமும் நிறைந்தால்
  • அதனினும் சொர்க்கம் வேறு உளதோ?
  • பொன்னைப் போன்ற பண்பில்
  • பொலிவு நிற்கும்.
  • பொய்மை இல்லாத நடத்தையில்
  • நீதி நிற்கும்.
  • மகளிர் அன்பில்
  • அறநெறி நிற்கும்.
  • மகளிர் கற்பில்
  • பருவ மழை நிற்கும்.
  • (சொர்க்கத்தின் பயணம் தொடரும்...)
  • ********************************************************************************
  • ********************************************************************************




6.  கம்பன் காட்டும் சொர்க்கம் இராமாயணம் படைத்த கம்பருக்கும் சொர்க்கத்தின் கனவு இருந்தது ! மண்ணுலகில் ஒரு சொர்க...